விடைத்தாள்களை ஒழுங்காக திருத்தாத

ஆசிரியர்களுக்கு தண்டனை.

சென்னை: "பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, 17-பி பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

பிளஸ் 2, மறுமதிப்பீடு திட்டத்தில், 5,726 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், பெரும்பாலான மாணவர்களின் மதிப்பெண்கள், ஏற்கனவே இருந்ததை விட, குறைந்து விட்டதாக, மாணவர்கள் புலம்பினர். குறிப்பாக, விண்ணப்பிக்காத மாணவர்களின் விடைத்தாள்களும், மறு மதிப்பீடு செய்ததால், பெரும் குளறுபடி ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா, நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். நடந்த சம்பவம் குறித்து, சபிதா, நேற்று மாலை கூறியதாவது:
மறு மதிப்பீடு திட்டத்தின் கீழ், "இணையதளத்தில் விண்ணப்பித்தாலே, விடைத்தாள் மறு மதிப்பீடு செய்யப்படும்" என, தெளிவாக தெரிவித்துள்ளோம். மாணவர்கள், கட்டணத்தை கட்டினார்களா, இல்லையா என்பது, பிரச்னை கிடையாது. சிலர், தாமதமாக கட்டணத்தை செலுத்தலாம்.
இதுவரை நடந்தது போல் தான், இந்த ஆண்டும், மறு மதிப்பீட்டு பணிகள் நடந்தன. விண்ணப்பித்த, 5,726 மாணவர்களில், 2,138 மாணவர்களுக்கு, மதிப்பெண் அதிகரித்துள்ளது. 1,153 மாணவர்களுக்கு, மதிப்பெண் குறைந்துள்ளது. 2,435 மாணவர்களின் மதிப்பெண்கள் மாறவில்லை. ஏற்கனவே, அவர்கள் எடுத்த மதிப்பெண், அப்படியே உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அதிகமான மாணவர்களுக்கு, மதிப்பெண் அதிகரித்துள்ளது. குறைவான மாணவர்களுக்குத் தான், மதிப்பெண் குறைந்துள்ளது. மதிப்பெண் குறைந்த மாணவர்கள் தான், குறை கூறுகின்றனர். மொத்தத்தில், 3,291 மாணவர்களின் மதிப்பெண்கள் மாறி உள்ளன.
இந்த விடைத்தாள்களை, முதலில் திருத்திய ஆசிரியர்கள் மீது, "17-பி" பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, சபிதா தெரிவித்தார்.
ஆசிரியர் மீதான நடவடிக்கை குறித்து, அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: குறிப்பிட்ட 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்தால், சம்பள உயர்வு வழங்கப்படாது; பதவி உயர்வும் தள்ளிப் போகும். கடந்த காலங்களில், இது போன்ற நடவடிக்கை, எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர் திருத்தும் விடைத்தாளை, மற்றொரு ஆசிரியர் திருத்தும் போது, சிறிது வித்தியாசம் வரும். இதை தவிர்க்க முடியாது.
மறு மதிப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்தால், மதிப்பெண் அதிகரிக்கும் என்ற எண்ணம் தான், பெற்றோருக்கு உள்ளது; குறையவும் வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர். மதிப்பெண் குறைந்த மாணவர்களின் பெற்றோர் தான், தற்போது, குறை கூறுகின்றனர்.
பொதுத்தேர்வு விடைகள், "ஆப்ஜக்டிவ்" முறையில் கிடையாது. விவரித்தல் முறையில் தான், தேர்வுகள் அமைகின்றன. எனவே, இதில், துல்லியமாக, மதிப்பீடு செய்து, மதிப்பெண்கள் அளிப்பது என்பது, சிரமமான காரியம்.
எனினும், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மீது, இதுபோல் நடவடிக்கை எடுப்பதால் தான், விடைத்தாள் திருத்தும் பணிகள் என்றாலே, ஆசிரியர்கள், தவிர்த்து விடுகின்றனர். இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment