பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு.

சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. இதையடுத்து, "டேட்டா சென்டரில்" மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.

கடந்த, மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். கடந்த மாதம், 26ம் தேதி முதல், 55 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பாடங்களுக்கான பணிகள் முடிந்த நிலையில், ஒருசில தொழிற்கல்வி பாடங்களை மதிப்பீடு செய்யும் பணி மட்டும், தற்போது நடந்து வருகிறது.
சென்னையில் நடந்து வரும் பணிகள், இன்றோ அல்லது நாளையோ முடியும்; வரும், 13ம் தேதிக்குள், மாநிலம் முழுவதும், பணிகள் முடிவடையும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, டேட்டா சென்டரில், கணினியில், மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும் பணி, விறு விறுப்பாக நடந்து வருகிறது.
20 முதல், 25 நாட்களுக்குள், அனைத்துப் பணிகளும் முடிந்து, மே 10 தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகி விடும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், வரும், 12ம் தேதியுடன் முடிகின்றன. இதன் விடைத்தாள் திருத்தும் பணி, வரும், 15ம் தேதி துவங்கி, 30ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகள், 66 மையங்களில் நடக்கின்றன.

No comments:

Post a Comment