பிளஸ்–2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றம் புதிய பாடப்புத்தகம் தயாரிக்கும் பணியில் 500 ஆசிரியர்கள்.

பிளஸ்–2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் படி புதிய பாடப்புத்தகங்களை 500 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் எழுத உள்ளனர்.

பிளஸ்–2 புதிய பாடத்திட்டம்
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தில் ஒரே விதமான பாடப்புத்தகங்கள்தான் வழக்கத்தில் உள்ளன.
5 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி
இந்த காலத்திற்கு ஏற்றவகையில் புதிய தொழில்நுட்பத்தில், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது.
500 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர்
அதைத்தொடர்ந்து புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்றபடி பாடப்புத்தகங்கள் எழுத நிபுணர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர்கள், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சேர்த்து மொத்தம் 500 பேர் சேர்ந்து குழுவாக இந்த புத்தகங்களை எழுத உள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம், நர்சிங், விவசாயம் உள்ளிட்ட பாடங்களை அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எழுதுகின்றனர்.
2015–ம் ஆண்டு அமல்
இந்த பாடப்புத்தகம் இறுதி செய்யப்பட்டு பின்னர் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படும். மாணவர்களுக்கு பிளஸ்–1 புத்தகங்கள் 2015–2016ம் ஆண்டும், பிளஸ்–2 பாடப்புத்தகம் 2016–2017ம் ஆண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment