பள்ளிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் இளையராஜா பேச்சு.

மதுரை:  பள்ளிகளில் இசையை கட்டாயப் பாடமாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில்  பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.

மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் துவக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமை வகித்தார். இந்த மையத்தை திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:  மதுரையில் தெப்பக்குளத்தில் அமர்ந்து பலமுறை பாடியிருக்கிறேன். இசைச் சொற்களை பயன்பாட்டில் முக்கியத்துவம் உள்ளது. மேற்கத்திய இசை அனைத்தும் இத்தாலிய மொழியில் இருக்கும். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசைச் சொற்கள் இருந்திருக்க வேண்டும். இசை இறைவனுடையது. தமிழிசை பற்றி எனக்கு தெரியாது. அது மட்டுமே எனக்குள் குற்ற உணர்வாக உள்ளது.  பள்ளிகளில் இசையை கட்டாய பாடமாக்க அரசு எப்போது நடவடிக்கை எடுக்கிறதோ, அப்போது தான் இசை உயிர்பெறும்.

இசையை கட்டாய பாடமாக்கினால் நாட்டில் வன்முறை குறையும். பஸ்சில் பயணம் செய்யும் போது ஒலிக்கும் பாடல், பயணிகளை தூங்க வைக்கிறது. அதே பாடல், டிரைவரை விழித்திருக்கச் செய்கிறது. ஒரு பாடலை கேட்டால் நமது மனம் ஒரு நிலையில் நிற்கும்.  இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் தமிழிசை ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கல்லூரி செயலாளர் உமா, தமிழ்த்துறை தலைவர் பரமசிவம், திரைப்பட இயக்குனர் சுகா உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment