ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய முறை: ஆங்கிலத் திறனுக்கு அவசியம் இருக்காது.


புதுடில்லி: அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் புதிய முறையை பின்பற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதன்மை தேர்வில் ஆங்கிலத் திறன் அவசியம் இல்லை; அந்த மதிப்பெண், இறுதித் தேர்வில் சேர்க்கப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற, உயரதிகாரிகளை தேர்வு செய்யும் பணியை, யு.பி.எஸ்.சி., அமைப்பு மேற்கொள்கிறது. இம்மாதம், 5ம் தேதி, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பில், பல மாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.
அதன்படி, ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுத விரும்பாமல், வட்டார மொழியில் எழுத விரும்பினால், குறைந்தபட்சம், 25 பேர் தேர்ந்தெடுக்கும் மொழி தான், வட்டார மொழியாக இருக்கும். அது போல், விருப்பப்படமாக ஒன்றை இது வரை தேர்வு செய்தவர்கள், இரண்டு பாடங்களை விருப்பப் பாடமாக தேர்வு செய்ய வேண்டும்.
மேலும், இலக்கியம் பாடத்தை தங்கள் பட்டப்படிப்பில் எடுத்து படிக்காதவர்கள், அதை சிவில் சர்வீஸ் தேர்வில் விருப்பப்பாடமாக தேர்வு செய்ய முடியாது. அது போல், ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும், பொது அறிவு தேர்வில் இருந்த, இரண்டு பாடங்கள், நான்காக விரிவுபடுத்தப்பட்டன.
இவ்வாறு, சில முக்கிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், வட்டார மொழித் தேர்வுக்கு, யு.பி.எஸ்.சி., விதித்த கட்டுப்பாடுகள், அரசியல் கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளானது.
இதுகுறித்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ரகளையிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த வாரம், இந்த உத்தரவுகளை, யு.பி.எஸ்.சி., நிறுத்தி, அறிவிப்பு வெளியிட்டது. புதிய முறை விரைவில் பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைபாடு மற்றும் பென்ஷன் துறை அதிகாரிகள், யு.பி.எஸ்.சி., அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த மாற்றங்கள், அடுத்த ஆண்டு தேர்வு எழுதுபவர்களுக்குத் தான் பொருந்தும் படி இருக்கும்; வரும், மே, 26ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட தேர்வில், எந்த மாற்றமும் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment