கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவு.

மதுரை: "தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து, ஒளி-ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு: கற்றலில் குறைபாடுள்ள (டிஸ்லெக்சியா) மாணவர்களால் சரளமாக, சத்தமாக பேச முடியாது. புதிய வார்த்தைகளை கற்க முடியாது. உயர்கல்விக்குச் செல்லும் போதும், அதே நிலை நீடிக்கிறது. இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
அனைத்துப் பள்ளிகளிலும், மருத்துவக்குழு ஆய்வு செய்ய வேண்டும். இம்மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். பிறமொழிகளில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒளி - ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பள்ளிக் கல்வி செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்பநல செயலாளர் மனுவை பரிசீலிக்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிய வேண்டும். அவர்களுக்கு ஒளி-ஒலிகாட்சி மூலம் கற்பிக்க நடடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment