தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எத்தனை 

பேருக்கு அரசு பணி வாய்ப்பு?

சென்னை: டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.

டி.இ.டி., முதல் தாள் தேர்வில் 12,596 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் பணியிடங்கள் வரை காலியாக இருப்பதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில் 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், காலியாக இருக்கின்றன.
பள்ளி கல்வித்துறையில், தற்போதைய நிலவரப்படி 10,500 இடங்கள் காலியாக உள்ளன. மே மாதம் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், மேலும் சில ஆயிரம் இடங்கள் அதிகரிக்கலாம். மொத்தத்தில், 15 ஆயிரம் பேருக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தேர்ச்சி பெற்ற 27 ஆயிரம் பேருக்கும், இம்மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலோ சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறையிடம் டி.ஆர்.பி. வழங்கும். டிசம்பர் இறுதிக்குள் புதிய ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படலாம்.
இடைநிலை ஆசிரியர் பணியை பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றிருந்தாலும் மாநில அளவில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மட்டும் தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். எனவே 12 ஆயிரம் பேருக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை.
இவர்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் வேலையில் சேரலாம். அரசு பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கை சதவீதம் சரிந்துகொண்டே வருகிறது. இதனால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25 என்ற நிலை உள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் நியமனம் செய்யும்போது, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில் ஆசிரியர் நியமனம் பெரிய அளவில் இருக்காது என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment