பதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2–க்கு சமமாக கருதலாம் ஐகோர்ட்டு உத்தரவு.

ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர்
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.

ரத்து செய்ய வேண்டும்
பணி மூப்பு அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால் பிளஸ்–2 படிக்காதவர்களுக்கு இந்தப் பதவி உயர்வு பெறத் தகுதி இல்லை என்று கூறப்பட்டது. இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் 13.9.2011 தேதியிட்ட வழிகாட்டி உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு உண்டு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:– தொடக்கக் கல்வி இயக்குனரின் அந்த உத்தரவை மற்றொரு வழக்கில் கடந்த 2.7.12 அன்று ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ கல்வி, பிளஸ்–2 படிப்புக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும். எனவே மனுதாரருக்கு பதவி உயர்வு பெறும் உரிமை உள்ளது. அதன்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கேற்ற பணப் பலன்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment